Sunday, November 16, 2014

லீடர்-க்கும் பாஸ் (Boss)-க்கும் என்ன வித்தியாசம்? - 1


“மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்கள், நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள்”
-கார்ல் ரோஜர்ஸ், உளவியலாளர்
தலைப்புக்கு சம்பந்தமே இல்லாத இந்த மேற்கோளை எதற்காக முதல் வரியாக குறிப்பிட்டிருக்கிறேன் என்ற கேள்விக்கான காரணத்தை கடைசி பத்தியில் சொல்கிறேன். அதற்காக நேராக கடைசி பத்திக்கு செல்லாமல் தொடர்ந்து படியுங்களேன்!

கற்றல் பொதுவாய்  நான்கு விதங்களில்  நிகழ்வதாக உளவியல் சொல்கிறது. (இதுவும் தலைப்புக்கு சம்பந்தம் இல்லாமல் இருப்பது போல் தெரியலாம்!)
1. பயிற்சியின் மூலம் பழக்கப்படுத்தப்படுதல் (Classical Conditioning)
2. பார்த்து கற்றுக்கொள்ளல் (Observational Learning)
3. நன்மை தீமைகளை அறிவின் மூலம் பகுத்து உணர்தல் (Insight Learning)
4. நன்மை தீமைகளை செய்து பார்த்து உணர்தல் (Operant Conditioning)
மேற்சொன்னது நான் 6 வருடத்திற்கு முன் என் முதுநிலை உளவியல் படிப்பில் தேர்வுக்காக படித்தது! நன்றாக நடத்திய ஆசிரியரின் புண்ணியத்தால் இன்னும் ஞாபகம் இருக்கிறது!
பண்ணிரெண்டாம் வகுப்பு முடிந்தவுடன் பகுதி நேர வேலைக்கு செல்ல ஆரம்பித்தலிருந்து இன்று வரை எடுத்துக்கொண்டால் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் பல்வேறு நிறுவனங்களில் பல்வேறு விதமான தலைவர்களுக்கு கீழ் நான் வேலை பார்த்திருக்கிறேன்.

இந்த 10 ஆண்டுகளில் நான் வேலை பார்த்த நிறுவங்களில் சில நிறுவனங்களில் எனக்கு அமைந்த சில பாஸ் (Boss) வகையிலான தலைவர்களுடன் எனக்கு நேர்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன்.
      (i)           முறையான பயிற்சி என்று எனக்கு எதுவும் கொடுக்கப்படமாட்டார்கள். ஏன் என்று கேட்டால் அதெல்லாம் வேலை செய்யும் போது தானாக கற்றுக்கொள்வாய், எதுவாக இருந்தாலும் என்னை கேட்டு செய் என்று சொல்லி விடுவார்கள். ஏதாவது தவறு செய்தால் உடனே குறுகிய கால உடனடி பயிற்சி என்ற பெயரில் நான் செய்த தவறுகளை குத்திக் குத்திக் காண்பிப்பார்கள்.
    (ii)            எனக்கு முன்மாதிரியாகவே இருக்கமாட்டார்கள். கொள்கைகள் என்று எதுவும் இல்லாது தனக்கு தோன்றுவதையெல்லாம் செய்யுமாறு எனக்கு கட்டளை இடுவார்கள். அவர் ஒரு முறை சொன்னதை அவர் வகுத்த கொள்கையென கொண்டு செயல்பட்டால், ஏன் நீயாக கருதிக்கொள்கிறாய் என்று பின்னர் கேள்வி கேட்பார்கள்.
   (iii)            ஏன் ஒன்றை செய்ய வேண்டாம் என்கிறார், ஏன் வேறு ஒன்றை செய்யச்சொல்கிறார் என்ற கேள்விகளுக்கு விடைகளை சொன்னதே கிடையாது. அவர்களது முடிவுகளை என் அறிவின் மூலம் பகுத்து ஆராய எனக்கு வாய்ப்பளிக்கவே மாட்டார்கள். நமக்குத்தான் சரியாய் வேலை செய்ய தெரியவில்லை, ஆகவே ஒவ்வொரு முறையும் அவர்களை கேட்டே செய்து விடலாம் என்று கேட்கப்போனால் “ஏன் ஒவ்வொரு முறையும் என்னை கேட்டு செய்கிறாய், உனக்கு சொந்த புத்தி கிடையாதா?” என்று சொல்லாமல் சொல்வார்கள்.
  (iv)            சரி! நாமாக செய்து பார்த்து கற்றுக்கொள்ளலாம் என்றால், ஓரிரு தவறுகள் நடக்கும். அப்படி தவறுகள் நிகழ்வது சகஜம்தான் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு என்னை சமாதானப்படுத்திக்கொள்ளும் வேளையில் வந்து விழும் “என்னைக் கேட்டுதானே செய்ய சொன்னேன், நீயாக எதற்கு செய்தாய்?!” என்ற பழைய அத்தியாயம். எப்போது நான் தவறு செய்வேன், உட்புகுந்து தன் அதிகாரத்தை நிலை நாட்டலாம் என்று காத்திருப்பார்கள்.

இவை தொடந்து நடக்க, ‘கேட்டு செய்-சுயமாய் செய்-கேட்டு செய்’ என்ற சுழலில்  நான் சிக்கி சின்னாபின்னம் ஆகி அங்கிருந்து ஓடினால் போதும் என்று சம்பளத்தைக் கூட வாங்காமல் ஓடி வந்துவிடுவேன்.
ஆக உளவியல் கூறும் நான்கு கற்றல் முறைகளில் ஒன்றில் கூட எனக்கு கற்றல் நிகிழவில்லை. முறையான, முழுமையான பயிற்சி அளிக்கப்படவில்லை. முன்மாதிரியாகவோ, கொள்கை ரீதியாகவோ வழிகாட்டிகள் யாரும் இல்லை. சுயமாய் சிந்தித்து செயல்பட வாய்ப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. செய்து கற்றுக்கொள்ளலாம் என்றால் அதில் சகஜமாக நிகழ்ந்த தவறுகள் பெரிதுபடுத்தப்பட்டன.

ஆக தலைவர் என்றால்
      (i)            பின்பற்றுபவருக்கு முறையான, முழுமையான பயிற்சி அளிப்பதற்கான திறன் இருக்க வேண்டும்.
    (ii)            பின்பற்றுபவர்களுக்கு முன்மாதிரியாகவும், சீரான கொள்கைகளுடனும் இருக்க வேண்டும்.
   (iii)            ஏன் ஒன்றை செய்ய வேண்டும், இன்னொன்றை செய்யக்கூடாது என்று அவர்களது கருத்தை பின்பற்றுபவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அவர்களில் கருத்துக்களை அறிவின் மூலம் பகுத்து ஆராய பின்பற்றுபவருக்கு வாய்ப்புகள் தரப்பட வேண்டும்.  
  (iv)            முறையான, முழுமையான பயிற்சி அளிக்க முடியாமல் போனால், வேலையை செய்யும் போது பல தவறுகள் நடக்கும், அப்படி தவறுகள்  நிகழும் போது  அவற்றைப் போட்டு குத்திக் குடையாது சரியான முறையை கற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்பாக எடுத்துக்கொண்டு முறையாக பயிற்சி தர வேண்டும். பயிற்சி அளிக்கிறேன் என்ற பெயரில் தான் சொல்வதைத்தான் செய்ய வேண்டும் என்று கூறாது, அழுத்தங்கள் தராது வேலையைக் கற்றுக்கொள்ள போதுமான நேரமும், சுதந்திரமும் தர வேண்டும்.
இந்த நாடாகட்டும், உங்கள் வீடாகட்டும், உங்கள் வேலை பார்க்கும் இடமாகட்டும். இந்த நான்கு விஷயங்களையும் உங்கள் தலைவர் செய்கிறாரா? ஆம் எனில் அவர் தலைவர். இல்லையெனில் அவர் தலைக்கன தலைவர்.

கடைசியாக ஒரு விஷயம் “என் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்” என்பது ஒவ்வொருவரின் அடிப்படை தேவை. எப்போது அந்தத் தேவை பூர்த்தி செய்யப்படுகிறதோ அப்போது ஒவ்வொருவரும் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்ள தொடங்குவார்கள்.


ஒருவரை  நீங்கள் நம்பி அவர் உங்கள்  நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்ளவில்லை எனில் அவருடைய “என் மீது நம்பிக்கை வையுங்கள்” என்ற தேவை நிறைவேறவில்லை என்று பொருள்.  நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தும், அவரது அந்தத் தேவையை உங்களால் திருப்திப்படுத்த முடியவில்லை எனில் அவர் வளர்ந்த விதத்திலோ, குடும்பத்திலோ வேறு பிரச்சனைகள் இருக்கலாம் அல்லது ஏதாவது ஒரு குறிப்பிட்ட மன நோயால் அவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பது என் கருத்து. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்தால் அவர்கள் தேறி உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக  நிச்சயம் நடந்துகொள்வார்கள். ஏனெனில் “மனிதர்கள் அனைவரும் அடிப்படையில் நல்லவர்கள், நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள்!”

1 comment:

  1. Sands Casino - SEGRA
    Come play the best slots, table games and live casino table games 1xbet korean at Sands Casino 샌즈카지노 in Las Vegas, Nevada. Enjoy a variety of casino games including blackjack, roulette, 카지노사이트

    ReplyDelete