Saturday, November 8, 2014

தவறான வழியில் பணம் சம்பாதிப்பவர்களுக்கு என்ன நடக்கிறது? - ஓர் உளவியல் பார்வை

ஏன் ஒருவர் தவறான வழியில் பணம் தேடுகிறார்?  ‘பிறர் தவறான வழியில் பணம் சம்பாதித்து மகிழ்ச்சியாக வாழ்வதைப் பார்க்கும் போது’,     ‘சரி அவ்வாறு சம்பாதித்து பார்க்கலாமே என்று ஒரு முறையோ, சில முறைகளோ செய்த போது வந்த நல்ல விளைவுகளால்’ என இரண்டு காரணங்களை சொல்ல முடியும்.

உண்மையில் தவறான வழியில் பணம் சம்பாதிப்பவர்கள் மகிழ்ச்சியாக இல்லை ஆனால் அவர்களுக்குள் “தவறான வழியில் வரும் பணம் அவருக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்ற மாயை ஏற்படுகிறது. உழைக்காமல் கிடைக்கும் பணம் அவரது மனசாட்சியில் ஆரம்பத்தில் சில உறுத்தல்கள் ஏற்படுத்தும்போது “எல்லோரும்தான் இப்படி பணம் சம்பாதிக்கிறார்கள். நான் நேர்மையாக இருந்தால் வாழ்வில் முன்னேற முடியாது” என திரும்ப திரும்ப தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறார்கள்.

“லஞசம் வாங்கிய அதிகாரி கைது” என்று தொலைக்காட்சிகளில் செய்தி வரும்போதும், தங்களுக்கு தெரிந்தவர்கள் தவறான வழியில் சொத்து சேர்த்து பிடிபடும் போதும், “இதெல்லாம் எனக்கு நடக்காது”, “அவன் கவனக்குறைவாக, பேராசைப்பட்டு லஞ்சம் வாங்கியிருக்கிறான், அதனால்தான் மாட்டிக்கொண்டான்” என்று பலவாறு தங்களுக்கு சமாதானம் சொல்லிக்கொள்வார்கள். தவறான வழியில் பணம் சம்பாதித்து இப்போது மாட்டிக்கொண்ட அனைவருமே ஒரு காலத்தில் இப்படித்தான் சொல்லிக்கொண்டிருந்தார்கள் என்று இவர்களுக்கு தெரியாது.

பணம் இருந்தால் எதையும் வாங்கிவிடலாம்,  நினைப்பதெல்லாம் நடந்துவிடும் என்று கிடையவே கிடையாது. பணத்திற்கு மயங்காத மக்களும், விஷயங்களும் இன்றும் உலகில் இருக்கத்தான் செய்கின்றன. உலகம் என்றும் போல் இன்றும் ஒரு நியதியுடன்தான் இயங்கி கொண்டிருக்கிறது. அதுதான் “தீதும் நன்றும் பிறர்தர வாரா!”

தவறான வழியில் பணம் சேர்ப்பவர்களுக்கு எதிரிகள் வளர்ந்து கொண்டே போகிறார்கள். ஏனெனில் உரியவர்களுக்கு சென்று சேர வேண்டிய பணத்தை ஒருவரே எடுத்துக்கொள்கிறார் என்றால் அந்த உரியவர்கள் எதிரிகளாய் ஆகிறார்கள். அந்த எதிரிகளுக்கு ஒரு காலம் வரும்போதோ அல்லது உலக நியதியின்படி மனசாட்சி திரும்பத்திரும்ப தவறு எனச் சொல்லச் சொல்ல விடாமல் செய்த தவறுகளுக்கான தண்டனையை தங்கள் வாழ்நாளின் குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் அனுபவிக்கிறார்கள். அந்த தண்டனைகள் ஒரு தனிமனித/அந்தரங்கமான/ அக உள்ளுணர்வு சார்ந்த தண்டனையாய் கூட இருக்கலாம். எடுத்துக்காட்டாக ‘வலி’ என்பதை கூறலாம். வலி என்பது அனுவிப்பவரால் மட்டுமே உணரக்கூடியது. அதனை மற்றவர்கள் அளந்து அறிய முடியாது. அது போலவே வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு “இப்படி தவறான வழியில் சொத்து சேர்த்த இவர் இன்னும் நன்றாகத்தானே இருக்கிறார்” என்று கூட தோன்றலாம்.  ஆனால் உண்மை நிலை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.

உளவியல் பூர்வமாக பார்த்தால், இவ்வாறு தங்கள் மனசாட்சிக்கு எதிராக நடந்து கொள்பவர்களின் வாழ்க்கையி; “பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டேன்” என்ற வகையிலான சில மோசமான நிகழ்வுகள் நடந்திருக்கும் அல்லது “பணம் மட்டும் இருந்திருந்தால் என் குழந்தைகளை நான் பெரிய பள்ளியில் சேர்த்திருப்பேன்” என்ற வகையில் அவர்கள் வாழ்க்கையில் நடந்தவைகளை மோசமான நிகழ்வுகளாக அவர்கள் தவறாக புரிந்து கொண்டிருப்பார்கள்.  

தொடந்து தவறான வழியில் பணம் சேர்க்க சேர்க்க, அவர்களுக்கு எதிரிகள் கூடிக் கொண்டே போகிறார்கள். எதிரிகள் அதிகரிக்க அதிகரிக்க சம்பந்தப்பட்ட நபருக்கு பயம் தொற்றிக்கொண்டு விடும். தான் பயப்படுகிறோம் என்று தெரிந்தால், இது வரை சேர்த்தெல்லாம் போய் விடும் என்று உணர்ந்து, பொய்யாய் தைரியமாக இருப்பது போல் நடிக்கத்தொடங்குகிறார்கள். எந்த அசம்பாவிதமும் தங்களைச் சுற்றி நடக்காவிடில், கொஞ்ச நாட்களுக்கு பின் மீண்டும் தைரியம் கொள்கிறார்கள். ஏதாவது நடந்துவிட்டால், மீண்டும் நடிக்கத்தொடங்கி விடுகிறார்கள்.

இது தெரியாத பலர் அவர்களைப் பார்த்து தவறான வழியில் பணம் சேர்க்கத் தொடங்குகிறார்கள். இந்தப் பலருக்கு தெரியாது ஒரு நாள் இல்லை ஒரு நாள் அவர்களைப் போல் இவர்களும் மனசாட்சியின் சுழலில் சிக்கி நிம்மதி இழக்கப் போகிறார்க்ள் என்று!

தண்டனைகள் என்பவை  நீதித்துறையால் தரப்படவில்லையென்றாலும், உலக நியதிப்படி தரப்படுகிறது. தண்டனை என்பது வாழ்க்கை முறை சார்ந்த நோயாகவும், விபத்துக்களாகவும், இயற்கை சீற்றங்களாகவும், சொத்து சேர்த்து மகிழ்ச்சியாய் வாழ வைக்க ஆசைப்பட்ட குடும்பத்தினருக்கும், குழந்தைகளுக்கும் நேரும் எதிர்பாராத நிகழ்வுகளாகவும் இருக்க முடியும்.

எடுத்துக்காட்டாக நடந்தோ அல்லது சைக்கிளிலோ போய்கொண்டிருந்த ஒருவர் லஞ்சம் வாங்கி பைக் வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் இப்போது தெருமுனைக்கு செல்வதானால் கூட அந்த பைக்கில்தான் செல்வார்.  முன்பெல்லாம் நடந்துகொண்டிருந்ததால் வராத சர்க்கரை வியாதி இப்போது திடீரென அவரை தாக்கி விட்டது.  பிடித்த உணவு வகைகளை உண்டு களிக்க லஞ்சம் வாங்கிய அவர் இப்போது கோதுமை, கேழ்வரகு என்று சில குறிப்பிட்ட உணவுகளை மட்டுமே சாப்பிட முடியும். லஞ்சம் வாங்கி அதிக பணம் சேர்த்திருக்கும் அவர் சிறிய மருத்துவமனைக்கோ அல்லது அரசு மருத்துவமனைக்கோவா போகப்போகிறார்? நிச்சயம் ஒரு கார்ப்பரேட் மருத்துவமனைக்குத்தான் போவார். அப்படிப்போகும் போது மருத்துவத்திற்கு நிறைய பணம் செலவழிக்க வேண்டி வரும். உண்மையில் உட்கார்ந்து யோசித்துப்பார்த்தால் லஞ்சம் வாங்கியதால் ஏற்பட்ட நன்மை என்று எதுவுமே இல்லையென்று அவருக்கு புரிந்துவிடும். ஆனால் அவ்வாறு உட்கார்ந்து அவர் யோசிக்கப்போவதில்லை, அப்படியே யோசித்தாலும் அந்த ஞானம் அவர்களுக்கு வராது. ஒரு வேளை ஞானம் வந்து விட்டால், உடனேயே லஞ்சப்பணத்தில் வாங்கிய அந்த பைக்கை விற்று, தன்னால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது செய்து விட்டு மீண்டும் சைக்கிளிலோ அல்லது நடந்தோ செல்லத்தொடங்கியிருப்பார்.

ஆனால் இப்படிப்பட்டவர்கள் மாறாக ஜாதகம் பார்க்க போவது, மருத்துவத்திற்கு வேண்டி இன்னும் அதிக லஞ்சம் வாங்குவது போன்றவற்றையும், அதிக பட்சம் கோயிலுக்கு போய் உண்டியலில் பணம் போடுவது என்று சம்பந்தம் இல்லாதவற்றையே செய்து கொண்டிருப்பார்கள்.

-வெகு நாட்களுக்கு பின், அரை மணி நேரத்தில் தூக்கம் வராமல் எழுதிய கட்டுரை. இந்த தூக்கத்தை தடுக்கும் சிந்தனைகள் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்!

3 comments:

  1. மிக மிக உபயோகமான கட்டுரை. நன்றி

    ReplyDelete
  2. மிக மிக உபயோகமான கட்டுரை. நன்றி

    ReplyDelete
  3. female E g g Donorz in India with the sum of $500,000.00 3 crore,Email: jainhospitalcare@gmailcom
    what sapp +91 9945317569

    ReplyDelete